Wednesday 22 February 2017

இலக்கியம் எனும் கடலில் நிலையாக நீந்த...

நினைவுகளின் ஒரு பதிவு
Bhuvanesh Kumar, II MA English

ஆம்... 'தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா' என்ற வாசகம் சிறிது உயிர் பெற்றது என்று தான் கூற வேண்டும். 21 ஆம் நூற்றாண்டில் வாழும் ஒவ்வொரு மாணவனும் தமிழ் சமுதாயமும் தன்னைத் தமிழன் என்று அடையாளம் காட்டிக் கொள்வதில் பெருமிதம் கொள்ள வைத்த வருடம் 2017. இவ்வருடத்தின் முதல் மாதத்தில் நடைப்பெற்ற ஜல்லிக்கட்டுக்கான அறப்போராட்டமே அதற்கு முக்கிய காரணம்.

பள்ளிப் பருவத்தில் விரும்பி தமிழ்க் கட்டுரைகளை எழுத விருப்பப்பட்ட நான், கல்லூரி வாழ்க்கை துவங்கியதிலிருந்து தமிழ்ப் பற்று சற்று குறைந்ததை எண்ணி வருந்துகிறேன். இந்நேரத்தில் என் பேராசிரியர் டாக்டர் ரூஃபஸ் அவர்களைப் பற்றி சில வரிகள் கூறியே ஆக வேண்டும்ஏனெனில் மாணவர்களை ஊக்குவிப்பதையே முக்கிய குறிக்கோளாகக் கொண்டவர். ஆங்கிலத் துறையில் பயின்றாலும் ஒவ்வொரு மாணவனும் தனது தாய்மொழி மீதான ஆர்வத்தை ஒரு போதும் விட்டு விடக் கூடாது என வகுப்புகளில் வலியுறுத்துவார். அவரின் பிரதிபலிப்பே எனது இக்கட்டுரை.

வழக்கம்போல் அன்று கதிரவனின் ஒளி என்னைத் தூக்கத்தின் சோம்பலிலிருந்து மெதுவாக என் கட்டிலின் மீது அமர வைத்தது. மணி சரியாக 6.40 இருக்கும். ஏனெனில் விடுதிக் குழாய்களில் தண்ணீர் விழும் சத்தம் என் காதுகளில் விழுந்தது. கல்லூரிக்கு மெதுவாக புறப்பட்ட நான் சரியாக 9.30மணிக்கு எனது வகுப்பு மாணவர்களுடன் அன்று நடைபெறவிருந்த பேராசிரியர் பிரமிளா பால் அவர்களின் உரையைக் கேட்க மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தோம். ஏனெனில் அவ்வுரை நினைவு (Memory Narratives) பற்றியது. வகுப்பிலிருந்து நண்பர்களோடு வெளியே வந்த நான் எந்த வழியைத் தேர்நதெடுப்பது என்பதில் சிறிய ஐயம் இருந்தது. வலப்புறமாக சென்று உரை நடக்கும் இடத்திற்கு செல்லலாமா அல்லது நேர் வழியைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலத் துறையை அடைந்து அங்கிருந்து செல்லலாமா? சிறிது நேரம் பேராசிரியர்களுடன் உரையாடியதற்கு பிறகு உரை நடக்குமிடத்திற்கு மெது-மெதுவாகச் சென்றோம்.

31-01-2017 சரியாக 10 மணியளவில் உரை நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. அன்று என் எண்ணத்திற்கு எதிர்மாறாகவே அனைத்தும் நடைபெற்றது. சிறிது தாமதமாக சென்றதால் உரை துவங்கி இருக்குமோ என்று எண்ணினேன். அப்படியானால் இருக்கை இருப்பது கடினம் தான்.பெரும்பாலும் பிரமிளா பால் அவர்கள்  'The Glass Menagerie' என்ற நாடகத்தைப் பற்றிப் பேசக்கூடும். உடனே என் மனதில் இன்னொரு நாவல் பற்றிய சிந்தனை ஓடியது. அந்நாவல் 'Lord Jim' என்ற நாவலாகும். நல்ல வேளை உரை துவங்கியிருக்கவில்லை. இருக்கையும் இருந்தது. வலதுபுறத்தில் இருந்த நான்காவது வரிசையில் நண்பர்களோடு அமர்நதேன். நான் மனதில் எண்ணி வைத்திருந்த இலக்கியப் படைப்புகளை பற்றி பேராசிரியர் பிரமிளா பால் அவர்கள் பேசவில்லை. அதற்கு மாறாக பல இந்தியப் படைப்புகளை மேற்கோள் காட்டினார்மலையாளப் படம் மற்றும் இந்திப் படங்களைப் பற்றி அவர் அழகாக வருணித்தார். அவர் எளிதில் கூட்டத்தோடு ஒன்றிணையும் திறன் உடையவராக இருந்தார்மாணவர்களோடு மாணவர்களாகவே ஒன்றிணைந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அவர்களின் உரை என் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதுமேலும் அவர் மேற்கோள் காட்டிய இலக்கியப் படைப்புகளில் ஒன்றான 'God of Small Things' என்ற நாவல் எனக்குப் பரிச்சயமான நாவல் என்பதால் விரைவில் புரிந்து கொள்ள முடிந்தது. எனது வாழ்நாளில் பிரமிளா பால் அவர்களின் உரை மறக்க முடியாததாக இருக்குமென நம்புகிறேன். அதற்குக் காரணம் அவ்வுரைப் பற்றிய என் சிறிய கட்டுறையே அதற்கு முக்கியப் பங்களிக்குமென நம்புகிறேன். இது போன்ற உரைகளின் மூலம் என்னால் இலக்கியம்  எனும் கடலில் நிலையாக நீந்த முடியமெனவும் நம்புகிறேன்.

Image Courtesy: eluthu.com

No comments:

Post a Comment